இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

 முன்னுரை:

        தமிழ்மொழியின் தொன்மையும், புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கியங்களில் சங்ககால இலக்கியங்களுக்கும், சங்கம் மருவிய கால இலக்கியங்களுக்கும் அமையப்பெற்ற பெருமை வேறெந்த இலக்கிய வகைக்கும் இல்லையென்று உறுதியாகக் கூறலாம். அவை இயற்றப்பட்டு, ஆண்டுகள் பல ஆயினும், இன்றுவரை தமிழ் தெரிந்தோர் அனைவராலும் விரும்பிக் கற்கப்பட்டும், ஆர்வலர்கள் பலரால் உரைகள் எழுதப்பெற்றும்ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த சங்க மருவிய இலக்கியங்களில் வைக்கப்பட்டவைதான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அதாவது நான்கு அடிகளும், அதற்கு குறைந்த அடிகளும் கொண்ட பாடல்களால் ஆன பதினெட்டு நூல்கள், தோகுக்கப்பட்டு இங்ஙனம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் நாற்பது என்னும் எண்ணால் குறிக்கப்பெற்ற நான்கு நூல்கள் உண்டு. அவை இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியன ஆகும். கார் நாற்பது அகம் பற்றியும், களவழி நாற்பது புறம் பற்றியும் பாடுகின்றன. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைக்கும் நூல்களாம். இன்னா தரும் செயல்களை இன்னா நாற்பதும், இன்பம் தரும் செயல்களை இனியவை நாற்பதும் தொகுத்து கூறுகின்றன. உலகப்பொதுமறையாம் திருக்குறள் அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தையே தனது பாயிரமாகக் கொண்ட நூல். இனியவை நாற்பது, காலத்தால் திருக்குறளுக்கு பின் வந்தது என்பதால் இந்த நூலின் கருத்துகள் திருக்குறளின் அறக்கருத்துகளை ஒட்டியே அமையப்பட்டிருக்கின்றன. திருக்குறள் கூறும் பல அறக்கருத்துகள், அதே பொருளில் எங்ஙனம் இந்நூலில் கையாளப்பட்டிருக்கின்றன என்பதை இனி விளங்கக் காண்போம்.

திருக்குறள்

திருவள்ளுவரால் சங்கக்காலத்தில் எழுதப்பெற்றாலும், இரண்டே இரண்டு அடிகளைக் கொண்டிருப்பதால் இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக வைக்கப்பட்டது. 9 இயல்களும், 133 அதிகாரங்களும், 1330 குறள்களும் கொண்டது. தனிமனிதனுக்காக இயற்றப்பட்ட திருக்குறளில், அரசன் முதல் அமைச்சர் வரை, இல்லறத்தார் முதல் துறவறத்தார் வரை, தலைவன், தலைவி, தூதன், ஒற்றன், உழவன், செல்வம் படைத்தோர், இரப்போர், நட்பு கொண்டவர்கள் என அனைத்துவகை மனிதர்களின் தொழில்களுக்கு ஏற்ப, அவர்களின் தன்மைகளுக்கேற்ப குறள்கள் இயற்றியுள்ளார். வாழ்க்கைக்கான அறங்கள் பலவற்றைக் கூறியிருக்கிறார்.

இனியவை நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பது என்னும் தூலில், நாற்பது வெண்பாக்கள் உள்ளன. நம் வாழ்விற்கு இன்பந்தரும் செயல்களை இனிய மொழியினில் கூறியிருப்பதால், இந்நூல் இங்ஙனம் பெயரிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நூலின் ஆசிரியர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந் சேந்தனார் ஆவார். பூதந்சேந்தனாரின் காலம் எட்டாம் நூற்றாண்டு, அதாவது 725 முதல் 750 வரை எனலாம். கடவுள் வாழ்த்து தவிர நாற்பது வெண்பாக்கள் உள்ளன.  இன்னா நாற்பது என்னும் நூலின் கருத்துகளை ஒட்டியே இவ்வெண்பாக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தமிழாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இனியனவானவை

 ஒருவர் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது என்பது இயல்பு. இதனை விதி என்றும், சென்ற பிறவியின் பயன் என்றும் கூறுவர். இருப்பினும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப, நாம் செய்யும் சில செயல்களே நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் தருகின்றன. பிறருக்கு நல்லன செய்தால் நமக்கும் நன்மையே பயனாக விளையும். அங்ஙனம் நமக்கு இன்பம் தரும் சிலவற்றை எடுத்துக் கூறுவதில் திருக்குறளும் இனியவை நாற்பதும் எங்ஙனம் ஒன்றுபடுகின்றன என்று காணலாம்.

இல்லறமும், மக்கள் பேறும்

ஒருவன் தன் வாழ்வில் எத்தனை செல்வங்கள் பெற்ற போதும், அவனுடைய இல்வாழ்க்கை நிறைவுற அமைந்தால் மட்டுமே, அவனது வாழ்க்கை இன்பமாக அமையும்.

“அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.” குறள் 49.

பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கை அமைந்தால் அதுவே ஒருவன் வாழ்க்கையில் செய்த அறமாகும். அவன் இல்லாளும் மாண்புடையவளாய், அவனும் பிறன் இல் நோக்கானாய் வாழ்தல் வேண்டும். இந்தக் கருத்தை

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்

இல்லவள் மாணாக்கடை (53) என்ற குறளும்,

மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் (பாடல் 2)

நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே (பாடல் 10)

என்ற இனியவை நாற்பது பாடல்களும்ம் கூறுகின்றன.

அது மட்டுமல்ல பெற்ற குழந்தைகளின் வளர்ச்சியை அருகிலிருந்து, அவர்தம் குரல் கேட்டு, அவர்களுடன் விளையாடி, மகிழ்ந்திருத்தல் இனிது. தாம் பெற்ற குழந்தைகள் நன்மக்களாக, நோயற்றவர்களாக இருக்க வேண்டும்.

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே (பாடல் 12)

குழவி தளர்நடை காண்டல் இனிதே (பாடல் 14)

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (பாடல் 14)

இவை இனியவை நாற்பது பாடல்கள். இதே போன்றே

மக்கள் மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. குறள் 65

குழலினிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.குறள் 66.

பொறையுடைமை மற்றும் புறங்கூறாமையும்

            பிறர் தனக்கு கெடுதல் செய்த போதினும், சுடும் தீச் சொற்கள் சொன்ன போதிலும், சினங்கொள்ளாது பொறுமையுடன் இருத்தல் எப்போதும் இனிமையே. தேவையின்றி சினம் கொண்டு, அவர்களைத் தண்டித்தால் அது அந்தக்கணம் மட்டுமே இனிமை தரும். ஆனால் அவன் பொறுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுதும் அவனுக்குத் துணையாக வரும். அதுபோல, பிறரைப்பற்றி இல்லாததும்,, பொல்லாததும் கூறாதிருத்தலும் இனிமை தரும். தமக்குத் தீங்கிழைத்தாரைப் பொறுத்துக் கொள்வதும், பிறரைப் புறங்கூறாதிருத்தலும் எஞ்ஞான்றும் இனிமை பயக்கும். இந்தக்கருத்தைத் திருக்குறள் கூறுகின்றது.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.” என்கிறது (குறள்.156)

“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.”  (குறள் 181)

இந்தக் கருத்தைத் தான் இனியவை யாற்பதும் பின்வரும் பாடல்களில் விளக்குகின்றது.

எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு. .05.

தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்

பத்திமையிற் பாங்கினியது இல். .32. 

ஈகை

            ஒருவன் வாழ்வில் நிறைவும், மகிழ்வும் பெற விரும்பினால் செய்ய வேண்டியவற்றுள் தலையானது தாம் ஈட்டியவற்றை பிறருக்கும் கொடுத்து, தானும் இன்புற வாழ்தலே ஆகும். பிறருக்கு ஈவதன் மூலம் அடையும் புகழானது இவ்வுலகில் நிலையானது ஆகும். பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய். நல்லி ஆகியோர் தமிழ்நாட்டில் ஏழு வள்ளல்கள் என்று போற்றப்படுகின்றனர். மூவேந்தர்களுக்கு இணையாக அவர்கள் புகழ் பெற்றதன் காரணம் இவர்களது கொடைத்தன்மையே. தம் குடியின் பெருமையை உணர்ந்து, தம் மக்களுக்க வேண்டியனவற்றை வார் வழங்கியதன் மூலம் நிலையாப புகழ் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய ஈகைக்குணத்தைக் கொண்டிருத்தல் என்றும் வாழ்வில் இனிமை தரும் என்பதை இனியவை நாற்பது

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் இனிது. (பாடல் 2)

                        முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது. (பாடல் 19) என்ற இரு பாடல்களின் மூலமும், திருக்குறள் ஈகை என்னும் அதிகாரம் மூலமும் விளக்குகின்றன. வறியார்க்கு ஈவதே ஈகை, தேவையற்றவர்களுக்கு ஈவது ஈகை யல்ல என்று தனது குறளின் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.

ஒத்த கருத்து வரும் மேலும் சில இடங்கள்

            அறக்கருத்துகள் பலவற்றைக் கூறுமிடத்து திருக்குறளும், இனியவை நாற்பதும் ஒத்து வருகின்றன. சொற்களைக் கையாளும் வகையிலும் அவை ஒத்து வருகின்றன. அவை கீழ்க்கண்டவாறு,

“நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்

ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே” (பாடல் 17)

“நட்டார்க்கு நல்ல செயலான் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்“ (குறள் 679) என்று நண்பர்களுக்கு நன்மை செய்தும், அதேநேரம் பகைவர்களுக்கும் கூட வேண்டியன செய்து நட்பாக்கிக் கொண்டால் வாழ்வு இனிதாகும் என்று கூறுமிடத்தும்,

“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே” (பாடல் 35)

“ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.” (குறள் 588) என்று ஒற்றர்களின் தன்மையைக் கூறுமிடத்தும்,  

“மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே” (பாடல் 13)

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின்” (குறள் 969)  என்று மானமிழப்பின் உயிர் நீப்பர் என்ற கருத்தினக் கூறுமிடத்தும்,

“நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே” (பாடல் 30)

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலினும் பெரிது” (குறள் 103) என்று செய்த உதவியினை நன்றியுடன் நினைத்துப் பார்த்து வாழ்தல் இனிது. என்ற கருத்தினைக் கூறுமிடத்தும்,


“பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே (பாடல்    39)

“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.” (குற்ள 1060) என்று இரப்பவர்களுக்கான அறவொழுக்கத்தைக் கூறுமிடத்தும்,

“அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே” (பாடல் 21)

“அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்” (குறள் 96) என்று அல்லதை நீக்கி, அறம் செய்து வாழ்தலின் இன்றியமையைக் கூறுமிடத்தும்,

“ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே” (பாடல் 4)

“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்” (குறள் 251) என்று புலால் மறுத்தல் பற்றி விளக்குமிடத்தும்.

                        “சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே” (பாடல் 34)

                        “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

                        காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு” (குறள் 642) என்று சொல்வன்மையின் சிறப்பு பற்றிக் கூறுமிடத்தும் இனியவை நாற்பதும் திருக்குறளும் பல அறக்கருத்துகளுடன் ஒத்து வருகின்றன.

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...