சங்க இலக்கியங்கள் சுட்டும் ஏழு அகத்திணைக் காதல்களில், ஏழாம் அகத்திணைக்காதல் பெருந்திணையாகும். பெயரைப் பார்க்கும் ஏதோ பெருமை மிகு காதல் என்ற எண்ணம் வருகிறதா? எனில் அது முற்றிலும் தவறு. பெருந்திணைக் காதல் என்றாலே பொருந்தாக் காதல் அல்லது பொருந்தாக் காமம் ஆகும். இது மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படாத, ஒரு இழிவான காதலாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய காதலைத் தற்காலத்தில் நிறைய காண்கிறோம். ஆனால் சங்க காலத்திலும் கூட இத்தகைய காதல்கள் இருந்திருக்கிறன என்பது வியப்பிற்குரிய செய்தி அல்லவா? எட்டுத் தொகை நூல்களுள் ஆறு தொகை நூல்கள் அகவாழ்வு பற்றி பாடுகின்றன. இருந்தும் அவற்றுள் கலித்தொகை மாத்திரமே பெருந்திணைப் பாடல்களைப் பாடுகின்றது. ஆனால் புறம் பாடும் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பெருந்திணைப் பாடல்களாக வருகின்றன. தலைவன் தலைவியின் அகவாழ்வு பற்றி பாடினாலும், புலவர் அவர்களின் பெயர்களை வெளிப்படையாகச் சுட்டினால் அது புறப்பாடலில் வைக்கப்படும்.
இதில் இன்னும் வியப்பு என்னவெனில்,
இத்தகைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பெருந்திணைக் காதல்கள் எவைஎவை
என தொல்காப்பியர், இலக்கணமே வகுத்துள்ளார். தொல்காப்பியத்தில்
அகத்திணையியலில் 56ம் பாடல் இது.
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே!
அதாவது மடலேறும்
காதல், இளமை தீர்ந்தபின் வரும் காதல், ஆராயாது வெளியிடும் பெருங்காமம், காமம் மிகுந்ததால்
செய்யும் தகா செயல்கள் இந்நான்கும் தொல்காப்பியம் காட்டும் பெருந்திணையின் வகைகள்
ஆகும். இனி ஒவ்வொரு வகையாகப் பார்க்கலாம்.
1. முதலில் ஏறிய
மடல்திறம். அதாவது மடலேறி தன் காதலை வெளிப்படுத்துதல்.
கைக்கிளைத்
திணையில் தலைவன் மடலேறப் போவதாகக் கூறி, தலைவியை அச்சுறுத்துவான். ஆனால் பெருந்திணையிலோ மடலேறியே
விடுகிறான். மடலேறுதல் என்பது பனை மரமட்டையின் அடியினைக் கொண்டு, குதிரை போன்ற சிலை ஒன்றை வடித்து, அதன் மேல் தலைவன் அமர்ந்திருப்பான்.
ஊரார் அந்த பாவைக் குதிரையை இழுத்தபடி ஊர் முழுதும் சுற்றி வருவார்கள். அதன்மேல்
அமர்ந்திருக்கும் தலைவன், தனது உடம்பில் சாம்பலை பூசி
பூவிளைப்பூ, எருக்கம்பூ, ஆவாரம்பூ இவற்றாலான மாலையை அணிந்து கொண்டு. தன் காதலியின் வரைந்த ஓவியத்தைக்
கையில் பிடித்தபடி வலம் வருவான். இதன் மூலம் தன் காதலை ஊராரருக்கும், காதலிக்கும் வெளிப்படையாக அறிவிப்பான்.
இதுவே சங்ககாலங்களில் மடலேறுதல் என வழங்கப்பட்டு வந்தது. ஒருமுறை மடலேறிய பின்பும்
தன் காதல் நிறைவேறவில்லை என்றால் மறுமுறையும் மடலேறி விட்டு தன் வாழ்க்கையை
முடித்துக்கொள்வான். எனவே இது பொருந்தாக் காதலில் சேரும்.
இதைப் பற்றி
கலித்தொகையில் நெய்தற்கலியில் 138ம் பாடலில் பாடுகிறார் புலவர் நல்லந்துவனார்.
(பாடல் அடிகள் 8 முதல் 17 வரை...)
மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை
அணிப் பூளை,
ஆவிரை, எருக்கொடு,
பிணித்து, யாத்து,
மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன்
எல்லீரும் கேட்டீமின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,
நல்கியாள்,
நல்கியவை
பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்குவிடும் என் உயிர்
இதன் விளக்கம்..
தலைவன் நீல மயிலின் பீலி, பூளாப்பூ, ஆவாரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றை நூலில் கோத்துக் கட்டிய மாலை
அணிந்துகொண்டு, ஊர்த் தெருவில் தலைவியின் பெயரைச் சொல்லிப் பாடிக்கொண்டு வருகிறான். ஊரார்
இவனைக் கேலி செய்கின்றனர். ஆனால் அவனோ
“எல்லாரும் இதனைக் கேளுங்கள் - என் நெஞ்சத் துன்பமும்,
இந்த மடல் குதிரையும்தான், இழையணிந்த என் தலைவியானவள் எனக்குத் தந்தவை. என்னுடைய பொறுமையோ
கட்டுக்குள் இல்லை. பூப்போன்ற நெற்றி கொண்டவள் எனக்குக் கொடையாக நல்கிய காம நோய்
இது. பாறை மேல் இருக்கும் உப்பால் செய்த பொம்மை மழையில் நனைந்து உருகுவது போல என் உயிர்
உருகுகிறது. “ என்று புலம்பியபடியே மடலேறி வருகிறான். அவள் ஒத்துக்கொண்டால்,
திருமணத்திலும், அவள் மறுத்தால் அவனது
மரணத்திலும் முடியும் இத்தகு காதல் பொருந்தாக் காதல் வகையாகும்.
2. அடுத்ததாக
இளமை தீர்திறம். அதாவது இளமை தீர்ந்தபின் வரும் காதல்.
இது மேலும் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
அ. தலைவன் முதியவனாக, தலைவி இளையவளாக இருந்து வரும் காதல்.
ஆ. தலைவன் இளையவனாக, தலைவி முதியவளாக இருந்து வரும் காதல்.
இ. அல்லது இருவருமே முதியவர்களான பிறகு தோன்றும் காதல்.
இவ்வகைக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளனவோ இல்லையோ, இன்றும் வளைகுடா நாடுகளில் வேலைக்குச்
சென்று, இளமை முழுதும் தொலைத்த பின்பு, முதுமையில் இல்லறம் நடத்த தாய்நாடு திரும்புபவர்களின் காதலும் பொருந்தாக்
காதலுக்கான சான்றுதானே!
3. அடுத்ததாக ஆராயாமல், தெளிவற்ற உள்ளத்தோடு வெளிப்படுத்தும் காமம். இது பெரும்பாலும் தலைவிக்கு உரிய காதல்வகையாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளைத் தன்னிடம் ஒருங்கே கொண்ட ஒரு பெண், தனது காமத்தை, ஊரார் அறிய வெளிப்படுத்த மாட்டாள்.
ஆனால் காமத்தீ தன்னைச் சுட்டெரிப்பதால், அப்பண்புகளையும் மீறி
வெளிப்படுத்துகிறாள் எனில் அது பொருந்தாக் காமம் ஆகும். இதற்கு சான்றாக
கலித்தொகையில் வரும் 142ம் பாடலைக் கூறலாம்.
(பாடல் அடிகள்
1 – 5 வரை)
புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும்
5
திருமணம் ஆகி
முதலிரவு அன்றே தலைவன் தலைவியை பிரிய நேரிட்டது. இதனைக் கண்டவர் கலக்கத்துடன்
சொல்கின்றனர். யாழில் பண்ணிசைக்கும் தொடங்கும் போது, யாழின் நரம்பு அறுபட்டு, செவிக்குச் சுவை
கிட்டாததைப் போல, தலைவியின் காமம் பயனின்றி போய்விட்டது.
அவளுடன் கூடியிருக்கும் சுற்றத்தாரால் விளையும் இன்பம் உண்டோ? அவர்களால் இவளுக்கு வரும் பயன்தான் என்ன?
காமத்தை அடக்கவியலா
தலைவி பின்வருமாறு புலம்புகிறாளாம்.
(பாடல் அடிகள்
15 – 23 வரை)
என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? 15
நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்.
'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை
செய்தான் இவன்' என,
'உற்றது இது' என, 20
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்?
இதன் விளக்கம்:-
“என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நன்றாகச் சிரியுங்கள். நான் துன்புற்றுக் கொண்டிருக்கிறேன்.
என் தலைவனது மாயமான மலர்மாலை அணிந்த
மார்பினைத் தழுவினால்தானே இன்பம்!” என்று புலம்புகிறாள். மேலும்
“அடியே, உனக்கு நேர்ந்தது என்ன? என்பீராயின், ‘அவன் என்னுடன் இணைந்தான். எனக்கு இது
நேர்ந்தது" என்று உரைக்கும்வண்ணம் நிகழ்ந்திருந்தால்,
நெய்தல் மலரிதழ் போன்ற என் கண்ணுக்கன்றோ பசலை
பாய்ந்திருக்கும்?” என்று புலம்பிக் கொண்டே இருக்கிறாள்.
எனவே இதுவும் பொருந்தாக் காதலுக்கு சான்றாகும்.
4. இறுதியாக காமம்
மிகுதியால் தகாதனவற்றைச் செய்ய வைக்கும் காதல்
அதாவது தன்
தலைவியின் மீது கொண்ட காதலினால் பணிக்குச் செல்லாமல், அவளது சொற்களுக்கு அடிபணிந்து, அறமல்லாதவற்றைச் செய்யும் காதல். அல்லது, தலைவியைப் பிரிந்த
சிறிது காலத்திலேயே காமத்தை அடக்கவியலாது வேறொரு பெண்ணை நாடிச் செல்லுதல்; இவை யாவும் பொருந்தாக் காதலே.
இவற்றையும்
தாண்டி இன்னும் ஒருவகைக் காதலும் பெருந்திணையில் வருகிறது. அது ஒரு பெண்ணின் விருப்பமின்றி
அவளுடன் இணைய முற்படுதல். இதற்கு குறிஞ்சிக்கலியில் வரும் 62ம் பாடல் சான்றாகும்.
பாடல்
அடிகள் (9-11)
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ, நீர் உண்பவர்?
இதன் விளக்கம்:
உன்னுடன் இணைவது எனக்கு இன்பம் இல்லை என்றுரைக்கும் தலைவியிடம் “சுடர் வீசும்
வளையல் அணிந்தவளே! உன் பேச்சினை மாற்று. வயதுக்கேற்றவாறு பேசு. இப்போது நான்
சொல்வதைக் கேள். தண்ணீர் பருகுபவர் தனக்கு இனிதாக இருக்கிறது என்று பருகுவார்களே அன்றி, தண்ணீருக்கு இனிமையாக இருக்கிறதா என்றா பருகுவார்கள்?”
என்று தலைவன் உரைக்கிறானாம்.
இங்ஙனம் இருவரின் உள்ளமும்,, பருவமும் மட்டுமல்ல. உருவமும் ஒத்து வரவில்லை எனில் அவை பெருந்திணைக்காதல்
என்று சங்க இலக்கியங்கள் நமக்கு விள்குக்கின்றன. இவை இன்றளவும் உண்மைதானே! காதலோ,
காமமோ இருவரின் உள்ளங்களும் ஒத்திருந்தால் மட்டுமே அவை முறையான காதலாகும்.
இல்லையெனில் அது இருவருக்கும் தீரா துன்பத்தையே தரும்.