முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும் - ஒப்புமைகள்

 

முன்னுரை:-

            தமிழ்ச்சங்க இலக்கிய நூல்களில, ஒன்றான பத்துப்பாட்டு என்னும் முத்தான தொகுப்பில் இடம்பெற்றவையே முல்லைப்பாட்டு மற்றும் நெடுநல்வாடை என்னும் இரு நூல்கள் ஆகும். முல்லைப்பாடலும், நெடுநல்வாடையும் ஒரே செய்தியைத்தான் கூறுகின்றன. போருக்குச் சென்ற தலைவனின்  பிரிவையெண்ணி தலைவி ஆற்றியிருத்தலைக் கூறும் முல்லைத் திணையில் அமையப்பெற்றிருக்கின்றன. தலையாலங்கானத்துப் போரின்போது நடந்த நிகழ்வுகளைக் கூறுவதகவே இரு பாடல்களும் உள்ளன. ஆயினும் அவற்றுள் முல்லைப்பாடல் அகத்திணையிலும், நெடுநல்வாடை புறத்திணையிலும் பாடப்பட்டிருக்கின்றன. தலைவன், தலைவி பற்றிய குறிப்புகள் பாடப்படாததால் முல்லைப்பாட்டு அகத்திணையிலும், வேப்பந்தழை அணிந்த வீரன் என்னும் குறிப்பினால், பாட்டின் தலைவன் பாண்டியமன்னன் என்னும் செய்தி வெளிப்பட்டதால் நெடுநல்வாடை புறத்திணையிலும் வைக்கப்பட்டு்ள்ளது.

           

ஆசிரியர் பற்றி:-

            இருநூல்களின் ஆசிரியர்களும் ந என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றவர்கள். முல்லைப்பாட்டை நப்பூதனாரும், நெடுநல்வாடையை நக்கீரனாரும் இயற்றியுள்ளனர். இருவருமே முல்லை நிலத்தின் அழகை வருணித்துள்ளனர்.

            காதலும் வீரமும் ஒருங்கே கொண்ட தமிழ் மண்ணில், தங்களது நூல்களில் இருவருமே தலைவியின் பிரிவுத் துன்பத்தையும், போரிலே வென்ற தலைவனின் வீரத்தையும் அழகாகப் பதிவிட்டுள்ளனர். பூதனார் 103 அடிகளில் முல்லைப்பாடலையும், கீரனார் நெடுநல்வாடையையும் பாடியுள்ளனர்.

 

பொதுவானவை:-

            1. இரண்டு நூல்களிலும் தலைவியைத் தேற்ற வேண்டியுள்ளது. மையுண்ட தலைவியின் கண்கள், முத்துப் போல கண்ணீர் உதிர்க்க, முல்லைப்பாட்டில் முதுமகளிரும், நெடுநல்வாடையும் செவிலித்தாயும் தேற்றுகின்றனர்.

            2. இரண்டு பாடல்களிலும் முல்லை நிலமலர்களான காந்தள், குவை பற்றிய குறிப்புகள் உள்ளன. வெண்காந்தள் பளிச்சிட, செங்காந்தள் குருதி போன்றும் மண்ணில் பரவியிருக்கின்றன.

            3. முல்லைப்பாட்டில் ஆய்ச்சியர் தாம் வளர்க்கும் ஆவின் கன்றுகளிடம் அன்பு காட்டி, ‘உமது தாயர் இதோ வருவர்’, எனக் கூற, நெடுநல்வாடையில் குளிரால் வாடி கலங்கி நிற்கும் கோவலனின் நிலை கூறப்படுகிறது.

            4. அகத்திணை நூலான முல்லைப்பாட்டில், காட்டிலே போர்க்களத்திலே பாசறைகள் கட்டப்படும் முறையும், அதன் அமைப்பும்  விளக்கப்பட, புறத்திணை நூலான நெடுநல்வாடையிலோ அரண்மனையும், அந்தப்புரமும் அமைந்த விதமும், தலைவியின் கட்டிலின் அமைப்பும் விளக்கப்படுகிறது. எத்துணை அழகான முரண்.

            5. முல்லைப்பாட்டிலும் சரி, நெடுதல்வடையிலும் சரி, போரில் தலைவன் வென்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. அவன் வீரத்தை, அவனது வெற்றியினால் வெளிப்படுத்திய ஆசிரியர்கள், தலைவனின் கண்ணோட்டத்தையும் கூறத் தவறவில்லை.

            6. தனக்கு வெற்றி ஈட்டித் தந்து, வில்லேந்தி, வேலேந்தி, வாளேந்தி, விழுப்புண் பெற்று வருந்தியிருக்கும் வீரர்களின் வருத்த‍த்தைப் போக்கும் வகையில், அரசனானவன் பாசறைக்கண் சென்று, அவர்களைக் கண்டதாக இரு புலவர்களும் பாடுகின்றனர்.

            7. வீர‍ர்களை மட்டுமல்ல, விலங்குகளைக் கண்டும் இரங்கினானாம் தலைவன். முல்லைப்பாட்டின் தலைவன், தலைவியைக் காணத் தேரில் விரைந்து செல்வதாக நிறைவுற, நெடுநல்வாடையோ தலைவன் தலைவியின் பிரிவு வருத்தினாலும், பாசறைக்கண் இருந்து, வீர‍ர்களைக் காண்பதாக நிறைவுறுகிறது.

            8. முல்லைப்பாட்டின் நிகழ்வுகள் கார்காலமாகவும், நெடுநல்வாடையின் நிகழ்வுகள் கூதிர்காலமாகவும் கூறப்படுகிறது. இரு நூல்களும் முல்லைத் திணையில் பாடப்பட்டது.

            இத்துணை ஒற்றுமைகள் காணப்பட்டாலும், சில அடிகள் மிக அழகாக தனித்துவம் பெற்றே விளங்குகின்றன. 

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...