முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும் - ஒப்புமைகள்

 

முன்னுரை:-

            தமிழ்ச்சங்க இலக்கிய நூல்களில, ஒன்றான பத்துப்பாட்டு என்னும் முத்தான தொகுப்பில் இடம்பெற்றவையே முல்லைப்பாட்டு மற்றும் நெடுநல்வாடை என்னும் இரு நூல்கள் ஆகும். முல்லைப்பாடலும், நெடுநல்வாடையும் ஒரே செய்தியைத்தான் கூறுகின்றன. போருக்குச் சென்ற தலைவனின்  பிரிவையெண்ணி தலைவி ஆற்றியிருத்தலைக் கூறும் முல்லைத் திணையில் அமையப்பெற்றிருக்கின்றன. தலையாலங்கானத்துப் போரின்போது நடந்த நிகழ்வுகளைக் கூறுவதகவே இரு பாடல்களும் உள்ளன. ஆயினும் அவற்றுள் முல்லைப்பாடல் அகத்திணையிலும், நெடுநல்வாடை புறத்திணையிலும் பாடப்பட்டிருக்கின்றன. தலைவன், தலைவி பற்றிய குறிப்புகள் பாடப்படாததால் முல்லைப்பாட்டு அகத்திணையிலும், வேப்பந்தழை அணிந்த வீரன் என்னும் குறிப்பினால், பாட்டின் தலைவன் பாண்டியமன்னன் என்னும் செய்தி வெளிப்பட்டதால் நெடுநல்வாடை புறத்திணையிலும் வைக்கப்பட்டு்ள்ளது.

           

ஆசிரியர் பற்றி:-

            இருநூல்களின் ஆசிரியர்களும் ந என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றவர்கள். முல்லைப்பாட்டை நப்பூதனாரும், நெடுநல்வாடையை நக்கீரனாரும் இயற்றியுள்ளனர். இருவருமே முல்லை நிலத்தின் அழகை வருணித்துள்ளனர்.

            காதலும் வீரமும் ஒருங்கே கொண்ட தமிழ் மண்ணில், தங்களது நூல்களில் இருவருமே தலைவியின் பிரிவுத் துன்பத்தையும், போரிலே வென்ற தலைவனின் வீரத்தையும் அழகாகப் பதிவிட்டுள்ளனர். பூதனார் 103 அடிகளில் முல்லைப்பாடலையும், கீரனார் நெடுநல்வாடையையும் பாடியுள்ளனர்.

 

பொதுவானவை:-

            1. இரண்டு நூல்களிலும் தலைவியைத் தேற்ற வேண்டியுள்ளது. மையுண்ட தலைவியின் கண்கள், முத்துப் போல கண்ணீர் உதிர்க்க, முல்லைப்பாட்டில் முதுமகளிரும், நெடுநல்வாடையும் செவிலித்தாயும் தேற்றுகின்றனர்.

            2. இரண்டு பாடல்களிலும் முல்லை நிலமலர்களான காந்தள், குவை பற்றிய குறிப்புகள் உள்ளன. வெண்காந்தள் பளிச்சிட, செங்காந்தள் குருதி போன்றும் மண்ணில் பரவியிருக்கின்றன.

            3. முல்லைப்பாட்டில் ஆய்ச்சியர் தாம் வளர்க்கும் ஆவின் கன்றுகளிடம் அன்பு காட்டி, ‘உமது தாயர் இதோ வருவர்’, எனக் கூற, நெடுநல்வாடையில் குளிரால் வாடி கலங்கி நிற்கும் கோவலனின் நிலை கூறப்படுகிறது.

            4. அகத்திணை நூலான முல்லைப்பாட்டில், காட்டிலே போர்க்களத்திலே பாசறைகள் கட்டப்படும் முறையும், அதன் அமைப்பும்  விளக்கப்பட, புறத்திணை நூலான நெடுநல்வாடையிலோ அரண்மனையும், அந்தப்புரமும் அமைந்த விதமும், தலைவியின் கட்டிலின் அமைப்பும் விளக்கப்படுகிறது. எத்துணை அழகான முரண்.

            5. முல்லைப்பாட்டிலும் சரி, நெடுதல்வடையிலும் சரி, போரில் தலைவன் வென்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. அவன் வீரத்தை, அவனது வெற்றியினால் வெளிப்படுத்திய ஆசிரியர்கள், தலைவனின் கண்ணோட்டத்தையும் கூறத் தவறவில்லை.

            6. தனக்கு வெற்றி ஈட்டித் தந்து, வில்லேந்தி, வேலேந்தி, வாளேந்தி, விழுப்புண் பெற்று வருந்தியிருக்கும் வீரர்களின் வருத்த‍த்தைப் போக்கும் வகையில், அரசனானவன் பாசறைக்கண் சென்று, அவர்களைக் கண்டதாக இரு புலவர்களும் பாடுகின்றனர்.

            7. வீர‍ர்களை மட்டுமல்ல, விலங்குகளைக் கண்டும் இரங்கினானாம் தலைவன். முல்லைப்பாட்டின் தலைவன், தலைவியைக் காணத் தேரில் விரைந்து செல்வதாக நிறைவுற, நெடுநல்வாடையோ தலைவன் தலைவியின் பிரிவு வருத்தினாலும், பாசறைக்கண் இருந்து, வீர‍ர்களைக் காண்பதாக நிறைவுறுகிறது.

            8. முல்லைப்பாட்டின் நிகழ்வுகள் கார்காலமாகவும், நெடுநல்வாடையின் நிகழ்வுகள் கூதிர்காலமாகவும் கூறப்படுகிறது. இரு நூல்களும் முல்லைத் திணையில் பாடப்பட்டது.

            இத்துணை ஒற்றுமைகள் காணப்பட்டாலும், சில அடிகள் மிக அழகாக தனித்துவம் பெற்றே விளங்குகின்றன. 

முல்லைப்பாட்டு -கதைச் சுருக்கம்

                பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வான் ஏர்பு

                கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

                பெரும்புயல் பொழிந்த சிறுபுன்மாலை

                ..............................................................

        ஒலிக்கும் பனிக்கடலை பருகி, வலப்புறம் எழுந்து, நேராக உயர்ந்து, விரைந்து செல்லும் மேகமானது, பெரும் மழை பொழிந்த கொடிய மாலை நேரத்தில்...

          மழை பொழியும் மாலைக்காலம் எங்ஙனம் கொடியதாக முடியும்? நமக்கெல்லாம் இனிமை தரும், ஆனால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு...

          விரிச்சி அதாவது நல்ல குறி கேட்க்க் காத்திருக்கும் பெருமுது பெண்டிர்க்கு. ஆய்ச்சியர் தம் கன்றுகளுக்கு கூறும் ஆறுதல் மொழியே நல்ல குறியானது.

          நாழி கொண்ட நெல்லோடு, நறு வீமுல்லை, அரும்பு அவிழும் அரளி கலந்து தூவி, ஊரின் புறத்தே நிற்கும் கொற்றவையிடம் வேண்டினராம்.

        முல்லைத் திணைக்கான உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள் அனைத்தையும் இந்த பத்தே அடிகளில் கூறி விட்டார் நப்பூதனார்.

     நல்ல செய்தி கிடைத்தவுடன், தலைவியிடம் சென்று, தலைவன் போரில் வென்று, தன் தேரில் திரும்பிக் கொண்டிருக்கிறானாம்.. நீ வருந்தாதே என்று தேற்றுகின்றனர்.

           

            இனி காட்சி மாறி, காட்டிலே தலைவனின் பாசறைக்குச் செல்கிறது,

            பாசறைகள் எவ்வளவு பாதுகாப்புடன் அமைக்கப்படுடள்ளது என்று விளக்கும் போது, காட்டாறு பாயும் முல்லை நிலத்தில், மணக்கும் முல்லை பசும்புற்கள் என அனைத்தையும் அழித்து, அங்கே வேட்டுவர்கள் ஏற்கனவே அமைத்திருக்கும் அவர்கள் இருப்பிடத்தையும் கைப்பற்றி, அவர்களைக் கொண்டே தம் படைகளுக்கு வேண்டிய பாசறைகளையும் அமைத்துக் கொண்டனராம்.

   படை என்றால் வீரர்கள் மட்டுமா? குதிரை யானை என்னும் விலங்குகளும்தான். யானைகளைக் கவனிப்போருக்கு யானையுடன் பேசும் வடமொழி தவிர வேறுமொழி தெரியாது என்ற குறிப்பும் உள்ளது.

     யானைப்படை, குதிரைப்படை வீரர்களிடம் வில், வாள், வேல் என படைக்கருவிகள் இருக்கம் அல்லவா? அவைகளும் ஆங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

         பாசறைகளுக்கு நடுவில், எல்லா அறைகளுக்கும் நடுவில், இன்னும் பாதுகாப்புடன் நீண்ட தூண்களும், திரைகளும் கூடிய பாசறை அரசனுக்குக் கட்டப்பட்டிருந்தது.

          பாசறைப் பெண்டிர் என்ற சொல்லாடல் கேள்விப்பட்டதுண்டா? பொருக்குப் பெண்களை அழைத்துச் செல்லும் வழக்கமு இல்லையே? பின்னர் ஏன் பெண்டிர் என சிந்தித்தால்

                        “நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ

                       கைஅமை விளக்கம் நுத்தோறும் மாட்ட”

            அதாவது அத்தனை பாசறைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் நீண்ட திரி கொண்ட

        பாவை விளக்குகள் அணைய முற்படும் போதெல்லாம், தம் கையில் வைத்திருக்கும் நெய் வைத்திருக்கும் சுரைக்காய் குடுவையைக் கொண்டு எரியச் செய்வது இவர்கள்தான் இப்பெண்டிர்தான்.

            ஆனாலும் பளிச்சிடும் ஒளிவிடும் வாளினையும், தம் கச்சையில் கொண்டிருப்பார்களாம். எவரேனும் தாக்க வந்தால், எதிர்த்தாக்குதல் நடத்தும் அளவு வாள்வீச்சில் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

            இவர்களைத் தவிர மெய்க்காப்பாளார்கள், குறுநீர்க்கன்னல் என்னும் நாழிகை காட்டும் கருவி கொண்டு, நாழிகையை கணக்கிட்டு, அறிவிக்கும் கணியர்கள் என இவர்களும் பாசறையில் இருப்பார்களாம். அது மட்டுமா? இரும்பில் வார் ஒன்றி கச்சையில் கட்டிய யவனர்கள் அதாவது கிரேக்கர்கள்; பாம்பு  போல சட்டை அணிந்த மிலேச்சர்கள் என அரசனுக்கு குற்றேவல் பணி செய்பவர்களும் பாசறையிலே யே இருந்திருக்கிறார்கள்.

            இத்தகைய பாசறையில், வெற்றி முழக்கம் முழங்கும் பாசறையில் ஒரு உருவம் மட்டும் அமைதியாய் எதையி சிந்தித்தபடி படுத்திருந்தது.

            வேலினால் விழுப்புண் பெற்று, அடிபட்டு தன் பெண்யானையின் நினைவே இல்லாமல் ஆண்யான்கள் துடிப்பதை எண்ணியும், அதுவும் எப்படி துடித்தது தெரியுமா? எதிரியின் யானைப்படை வேழங்களின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுண்டு, தரையிலே பாம்பு பதைப்பது போல துடிக்கும் அல்லவா? அதுபோல வலியினால் ஆண்யானைகள் துடிப்பதை எண்ணியும்,

            சேணத்தில் அம்பு பாய்ந்ததால் புண் கொண்டு, உணவு கொள்ளாது கிடக்கும் குதிரைகளைப் பற்றி எண்ணியும், போரிலே உயிர்நீத்த செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தனது வீர‍ர்களைப் பற்றிய எண்ணத்துடனும்,

            தனக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றிய நினைவின்றி , தன் கண்ணிமாலையைத் திருகிய வண்ணம் படுத்திருந்த அந்த மன்னன் வேறுயாருமல்ல; போரிலே வென்ற இப்படையின் மன்ன‍ன்தான்.

            இங்கே இவன் தனக்காக துன்புறும் படைகளை எண்ணி வருந்த, ஆங்கே இவனுக்காக இவன் வருகைக்காக, தலைவி பசலை கொண்டு, இடையில் மேகலை நில்லாமல், கைகளில் வளையணி கழன்று விழ அருகிலிருக்கும் பகுதியில் அருவி விழும் ஓசையைக் கேட்டபடி இருந்தாளாம்.

            சில நாட்கள் கழிந்து, அந்த அருவி விழும் ஓசையையும் மீறி, வேதேதோ ஒசை அவள் செவியை எட்டுகிறது.

                       “வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந்தானையோடு

                      விசயம், வெல்கொடி உயர வலன்ஏர்பு

                      வயிரும், வளியும் ஆர்ப்ப....”

            அதாவது போரில் வென்ற தனது பெரும் படையுடன், வெற்றிக்கொடி உயர்த்தி, உயர்ந்த வயிரும், வளைந்த கொம்பும் ஒருங்கே முழங்கும் ஓசைதான் அது;

            இப்படை இன்னும் காடுகளில்தான் வந்து கொண்டிருக்கிறது.

                            “செறி இலைக்காயா அஞ்சனம் மலர,

                        முறி இணர்க் கொன்றை நன்பொன்கால்

                        கோடல் குவி அங்கை அவிழ

                        தோடுஆர் தோன்றி குருதி பூப்ப...”

 

          அதாவது

            செறிந்த இலை கொண்ட  காய்ந்த அவிரிப்பூ மலர,

            கொத்தான கொன்றைப்பூ பொன்போல பூக்க,

            வெண்காந்தள் பூ அரும்பு விரல் போல விரிய,

            செங்காந்தள் மலரோ குருதியாய் பூக்க...

           

            செம்மாயான முல்லைக்காடுகளில் வரகுக் கொல்லையில் நீண்டு திரிந்த கொம்புகள் கொண்ட ஆண்மான்களும், பெண்மான்களும் இணைந்து தாவ... எதிர்த்து செல்லும் வெண்மேகங்களிலிருந்து மழை பொழிய...

            நாம் விரைந்து செல்லும் போது எதிர்தோன்றும் காட்சிகள் பின் செல்வது போல, இங்கே வள்ளிக்கிழங்குகள் முதிர்ந்த காடுகள் பின் செல்ல...

            அழகிய நெடிய தேரை, தேரோட்டி ஓட்ட, தலைவன் திரும்பிக் கொண்டிருந்தானாம். என்று முல்லைப்பாட்டை இனிதாக முடிக்கிறார் நப்பூதனார்.

 

நெடுநல்வாடை - கதைச்சுருக்கம்

          கூதிர்காலத்தில் நிகழ்வதாகத் தன் பாடலைத் தொடங்குகிறார் நக்கீரனார். அதாவது குளிர் காலத்தில், ஆநிரை மேய்ப்போர் நிரைகளுக்காய் வேறிடம் செல்ல, அங்கே குளிர் வாட்ட, அவர்கள் குளிரில் நடுங்கியபடி, நெருப்பு மூட்டி கைகளைக் காட்டி குளிர் காய.. விலங்குகள்மேய்தலை மறக்க, குரங்குகள் குளிரால் கூனி நிற்க, பறவைகள் மரத்திலிருந்து வீழ, கன்றுகளுக்குக் கூட பால் தர இயலாமல், அவற்றை தாய்ப்பசு உதைத்துத் தள்ள, குன்றுகளைக் குளிர்விக்கும் குளிராம் அது.

            குளி்ர் வந்தாலும், இன்னமும்  தூவானமாய் சிறுமழை இருந்து கொண்டே இருந்ததாம். அதனால் முல்லைக்காடுகளில் முசுண்டை, பீர்க்கம் பூக்கள் மலர்ந்திருந்தன. மீன் வரத்தும் இருந்து கொண்டிருந்ததை நீர்நிலைகளில் காத்திருக்கும் கொக்குகள் காட்டுகின்றன. நெற்கதிர்கள் முற்றி வளைந்தபடி உள்ளன. உயர்ந்த பாக்கு மரங்கள், தம் கிளைகளில் இருந்து, சொட்டு சொட்டாய் மழைநீரை வடிதுத்க் கொண்டிருந்தன.

           

            இனி காடுகளிலிருந்து ஊருக்குச் செல்வோம். காட்டின் அளவு இல்லையெனினும், ஊருக்குள்ளும் குளிர் இருக்கத்தான் செய்கிறது.

            மாடம் ஓங்கிய மல்லல் மூதூர். ஆறு கிடந்தன்ன அகன்ற தெருவில், திண்தோள் மக்கள், கண்ணி அணிந்து முறுக்குண்ட உடலுடன் குளிரையும் பொருட்படுத்தாது கள்ளுண்டு திரிந்தனர்.

    பெண்களோ, பணைத்தோளும் மெத்தென சாயலும், முத்து பொன்ற முறுவலும், குழையணிக்கேற்ற அசையும் கண்களும் கொண்டவராய், பூந்தட்டிலே வைக்கப்பட்ட பிச்சி விரிவதைக் கண்டு, மாலை நேரத்தை உணர்ந்து, நெய் விளக்கேற்றி,  நெல்லும் மலரும் கலந்து தூவி தெய்வம் தொழுதனராம்.

           மேலும் வீட்டின் வளர்க்கப்பட்ட புறாக்கள் வெளியே இரைதேட செல்லாது, இரவுபகல் தெரியாது மயங்கி இருந்தனவாம்.

       குற்றேவல் செய்வோரோ, குளிர்ச்சி தரும் சந்தனத்தை அரைக்காது, வெப்பந்தரும் கந்தூரியை அரைத்துக் கொண்டிருந்தனராம்.

            பெண்கள் நிறைய பூக்கள் சூடாது, சில பூக்களை மட்டும் சூடி, அகிலோடு அயிரையும் நெருப்பில் புகைத்தனராம்.

      குளிரினால் எப்போதும் சுஉழவும் ஆலவட்டம் என்னும் விசிறியும், சுருக்கப்பட்டது. வேலைப்பளு கொண்ட ஆழகிய சாளரங்கள் தாழிட்டுக் கிடந்தன.

     எவரும் குளிர்ந்த நீரைப் பருகாது மூட்டப்பட்ட நெருப்பின் வெம்மையை பெரிதும் விரும்பினர்.

      குளிர்ந்த யாழின் நரம்பினை, வெம்மையான தம் முலைகளில் தடவி முறை யாக ஒவிக்கச்செய்தனர்.

         தலைவனைப் பிரிந்த தலைவியும், தலைவியைப் பிரிந்த தலைவனும் மேலும் துன்புற்றனர்.

  ஊரைப் பார்த்து விட்டோம் அல்லவா? இனி அரண்மனைக்குள் செல்வோம். அரண்மனையானது, சிறந்த கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டு நிலத்தின் அமைப்பை ஆராய்ந்து, அகன்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

            நண்பகல் பொழுதினைக் கண்டறிய... இரு கோலினை நட்டு, மேற்கு நோக்கிச் செல்லும் கதிரவனின் கதிரானது, இக்கோல்களின் மேல் விழும் போது நிழல் ஒரு பக்கம் சாயாது நேராக விழுந்தால் அது நண்பகல் எனக் கணக்கிட்டுள்ளனர்.

  அரண்மனையின் வாயிலும், முற்றமும் மிக நேர்த்தியான கதவுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே எகினமும், அன்னமும் ஏறும் தாவித் திரிந்து மேலும் அழகைக் கூட்டுகின்றன.

            அரண்மனையில் குதிரைகள் சத்தமெழுப்ப, எங்கோ குழாயலிருந்து விழும் நீரின் ஓசை, அருவியின் ஓசை போலக் கேட்டது. மயில்களின் அகவல் ஒலி இனிமையானதாக இருந்ததாம்.

         இத்தனை அழகான அரண்மனையின் அந்தப்புரம் எவ்வளவு ஆழகாக இருக்கும்? மன்ன‍ன் அல்லாது, வேறு ஆண்மகன் புக இயலா காவலை உடைய அந்தப்புரத்திற்குள் நாம் நுழைவோம்.

   யவனர்களால் உருவாக்கப் பெற்ற பாவை விளக்குகள் நெய்யூற்றப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன. பாறைப் பெண்டிர் முல்லைப்பாட்டில் செய்ததை, இங்கு அரண்மனைப் பெண்டிர் செய்து கொண்டிருந்தனர். அதாவது விளக்குகளுக்கு நெய் குறையும் போதெல்லாம் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

       இத்தகைய அந்தப்புரத்தில் கொடிகளும், பூக்களும் சுவை சுற்றியிருப்பதைப் போன்று காட்சிகள் வரையப்பட்டிருந்தன.  

    அடுத்து, அந்தப்புரத்தில் தலைவியின் அறைக்குள் செல்வோம். அங்கே தலைவியின் அறையில் ஓர் அழகான வட்டக்கட்டில்.

        முரசு போன்ற நான்கு கால்கள் கொண்ட கட்டிலிலே, இலை வடிவம் போல தந்தங்களால் பொறிக்கப்பட்டிருந்தது. இத்தகையவட்டக் கட்டில் பாண்டில்எனப்பட்டது.

      இத்தகைய கட்டிலினை மிக நேர்த்தியாய் அழகு செய்திருந்தனர். முத்து மாலைகளைக் கோர்த்து கட்டிலினைச் சுற்றித் தொங்க விடப்பட்டிருந்தது.

   பூக்களைப் பரப்பி, போர்வையும், அன்னச் சிறகுகள் இட்ட மெத்தையும் இட்டு தலையணைகளும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவ்றிற்கும் மேலாக கஞ்சியிடப்பட்ட ஓர் அழகிய துணியும் விரிக்கப்பட்டிருந்தது.

         கட்டிலின் மேலே, புனையா ஓவியம் கடுப்ப, புனைவுஇல் தலைவி கிடந்தாளாம். அதாவது ஒப்பனை இல்லா ஓவியம் போன்று ஒப்பனையின்றி தலைவி இருந்தாளாம். மேலும் அரசிக்கான அணிகலன்கள் ஏதுமின்றியும், எளிய ஆடை அணிகளுடன் இருந்தாளாம். பணிப்பெண்கள் அடிபிடிக்க, செவிலியர் இன்சொல் கூறித் தேற்ற, தேறாதவளாய் புலம்பிய வண்ணம் கிடக்கிறாள். செவிலித்தாயரும் தலைவன் வருகைக்காக கொற்றவையை வேண்டுகின்றனர்.

      கிட்டத்தட்ட நூலின் இறுதிவரை அகத்திணை சார்ந்தே பாடிவந்த புலவர், நூலின் இறுதி இருபது அடிகளில் அரசனின் நிலை விளக்கி, நூலையும் புறத்திணை நூலாக்கி விட்டார்.

                  “வினைநவில் யானை

                நீர்திரள் தடக்கை நிலமிசைப் புரள”

    வெட்டப்பட்ட யானைகளின் தும்பிக்கைகள் நிலத்தில் புரள, எதிரியானைகளை விழ்த்தினராம் வீரமறவர்கள். இப்படிப்பட்ட வீரர்கள் கூட விழுப்புண்கள் பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனராம்.

           தலைவியைக் காண்பதற்கு முன் தனக்காக போரிட்ட வீர‍ர்களைக் காணும் பொருட்டு, தலைவனும் தலையில் வேப்பந்தழை சூடி, வீரனொருவன் வழி காட்ட பின் தொடர்ந்தானாம்.

            வீர‍ர்களுடன், யானைகளையும், குதிரைகளையும் கண்ட பின்பு,  அவற்றின் புண்களைக் கண்டு இரக்கங் கொண்டவனாய் பாசறையில் வருந்தியபடி இருக்கிறான்.

            முத்துமாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை, மழையிலிருந்து மன்னனைக் காக்க, தலைவன் அந்நள்ளிரவு நேரத்திலும் தலைவியை எண்ணாது, தனது வீரர்களை எண்ணியபடி இவர்களுடன் வெற்றிப்பாசறையில் இருப்பதாக நெடுநல்வடையை நிறைவு செய்கிறார் நக்கீரனார்.


ஔவையாரும் முல்லைத்திணைப் பாடல்களும்...

 சங்ககால ஔவையார்

            சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பெயர்களில், முதற்பெயராக அனைவரும் கூறுவது ஔவையாரைத்தான். இவர் கிட்டத்தட்ட 59 பாடல்கள் பாடி அதிகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் புலவர்கள் வரிசையில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.  59 பாடல்களில் 26 பாடல்கள் அகம் பற்றியும், 33 பாடல்கள் புறம் பற்றியும் பாடியுள்ளார். பிற்காலத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை பாடிய ஔவையார் வேறொருவர் ஆவார்.

            முல்லைத்திணைக்கான மூன்று பொருள்கள்

          முதற்பொருளாவன:

            நிலமும் பொழுதும்... திருமால் அருள்தரும் காடும் காடு சேர்ந்த இடமும். இதன் பெரும்பொழுது கார்காலமும்(ஆவணியும், புரட்டாசியும்), சிறுபொழுது மாலையும் ஆகும்.

          கருப்பொருளாவன.

            தெய்வம் – திருமால்; உணவு – வரகும், முதிரையும்         விலங்கு – மானும், முயலும்; மரம் –  கொன்றை, குருது, புதல்;     புள் – கானாங்கோழி;   இசைக்கருவி – ஏறுகோட்பறை;  தொழில்  - நிரை மேய்த்தல்;  மலர் – முல்லை. பிடவு;  நீர் – கான் ஆறு;

          உரிப்பொருளாவன:

            தலைவன் தலைவியைப் போரின் பொருட்டோ, தொழிலின் பொருட்டோ, பிரிதல்.

 

        சங்ககால ஔவையார் ஐந்து முல்லை நிலப்பாடல்களைப் பாடியுள்ளார். அவை மூன்று நற்றிணைப்பாடல்களும் (371, 381, 394),  இரண்டு குறுந்தொகைப் பாடல்களும் (99 மற்றும் 813)  ஆகும்.


நற்றிணைப் பாடல் 371.

காயாங் குன்றத்துக் கொன்றை போல

மா மலை விடர் அகம் விளங்க மின்னி

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்

பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்

நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி

அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்

குழல் தொடங்கினரே கோவலர்

தழங்கு குரல் உருமின் கங்குலானே.

 

(தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடிந்து திரும்பி வரும் வழியில், தேர்ப்பாகனிடம் தேரினை விரைந்து ஓட்டும்படிச் சொன்னபோது இங்ஙனம் உரைத்தான்.)

 

விளக்கவுரை:

            காயாத மரங்களையுடைய மலையில், சரக்கொன்றை மலர் பூத்தது போல;

            பெரிய மலையினூடே உள்ள பிளவுகள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி;

            என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருக்கும் இடம் நோக்கிச் சென்று;

            விரிந்த கரிய ஆகாயம் எல்லாம் மறைபடும்படி பரந்து,

            மழைபெய்யாதிருந்த மேகங்கள் மழை பெய்யத் தொடங்கிவிட்டன;

            நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் எல்லாம் கழற, ஏக்கமுற்று,

            அழத் தொடங்கினளே, ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய எம் தலைவி. அவளுக்கு எதிர்ப்பாட்டு போல,

            கோவலர் புல்லாங்குழலை, முழங்குகின்ற இடியோசை போல இரவிலே வாசிக்கத் தொடங்குவர்.

            (“கார்காலத்தில் வருவதாகச் சொல்லியிருந்தேன். கார்காலமும் வந்து விட்டது. என் தலைவி எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ஆதலால் என் தலைவி வருந்தும் முன் விரைவாகச் செல்வோம்.”)


 

நற்றிணைப் பாடல் 381

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்

பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;

கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை

வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை

யாங்கனம் தாங்குவென் மற்றே?- ஓங்கு செலல்

கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,

ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,

தேர் வீசு இருக்கை போல,

மாரி இரீஇ மான்றன்றால் மழையே.

           

            (தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்தும், இன்னமும் திரும்பி வராத தலைவனை எண்ணித், தோழியிடம் தலைவி புலம்பியது.)

 

விளக்கவுரை:

            பிரிவின் துன்பத்தில் நான் உழன்றாலும், அவர்பால் அன்பு கொண்டு சாவேன் என்பதே உண்மையாகும்;

            இன்னும்  இறந்தொழியவில்லை என்பதால் அன்பிலேன் அல்லேன்!

            கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில்,

            வேர்களெல்லாம் வெளிப்பட்டு நிற்கும் மாமரத்தின், காற்றில் அலையும் அழகிய மாந்தளிர்போல;

            நடுங்குதல் நீங்காத நெஞ்சுடன் இருக்கும் நான், அவர் வராத இப்பிரிவின் துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?

            தலைநிமிர்ந்து நடக்கும் உயர்ந்த, விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையை உடைய நெடுமான் அஞ்சி என்னும் மன்னன்,

            இரங்கிய உள்ளத்தால், தன்புகழ் நீண்டகாலம் விளங்குமாறு,

            இரவலர்க்குத் தேர்களை விடாமல் வாரிவழங்கும் அவனது அரசிருக்கையைப் போல,

            மேகமும், விடாமல் மழை பெய்து என்னை மயங்கச் செய்கிறது.

            (“கார்காலம் வந்தும் இன்னமும் அவர் வரவில்லையே”.)


 

நற்றிணைப் பாடல் 394

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,

பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப,

பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,

வன் பரல் முரம்பின், நேமி அதிர,

சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;

இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்

குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு

நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?

 

            (தன்னுடன் கூடிய தலைவன், தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் போது, தலைவி இங்ஙனம் எண்ணினாளாம்.)

 

விளக்கவுரை:

            மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டில்,

            வாடிய ஞெமை மரத்தின் மீதிருந்த பேராந்தை;

            பொற்கொல்லன் பொன்னணி செய்யும் போது எழுப்பும் இனிமையான ஒலி போல ஒலிக்க,

            பூட்டிய மணிகள் ஒலிக்கும், அரியஅணிகள் விளங்கிய நீண்ட தேரானது;      

            வறண்ட பரல் கற்கள் கிடக்கும் மேட்டு நிலத்தின்கண் அதிருமாறு செல்ல,

            சென்றனன் வாழி!  இப்பொழுது பனி விழும் இந்நாளில்,

            வழியில் உள்ள மேகங்கள் வந்து பொழியும் போது,

            மார்பில் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தோடு,

            நறிய குளிர்ச்சியுடையனாய் நின்றான்!

            நான் அவன் நிலையை எண்ணி நோகிறேன்.

           

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...