அகத்திணை - ஔவையாரின் குறுந்தொகைப்பாடல்கள் (பாடல் எண் 28, 29)


1. பாடல்: 28 

பாலைத்திணை

தலைவி கூற்று:
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
 
உரை:
(திருமணம் செய்துகொள்ளும் காலம் தள்ளிப்போகிறது. தோழிக்குக் கவலை. கிழத்தி தோழிக்குச் சொல்கிறாள். )

யாரிடம் சென்று முட்டிக்கொள்வேன்? யாரைக் குறை கூறித் தாக்குவேன்?
நானோ ஒருத்தி. ஏதாவது ஒரு காரணம் சொல்லி '' என்று திடீரெனக் கூவிவிடலாமா என்று தோன்றுகிறது.
அலமரல் என்னும் என் துன்பக் காற்றலைதான் என்னையே தாக்கி என்னையே அலைக்கழிக்கிறது.
என் உயவு நோயைத் தெரிந்துகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஊரிடம் முட்டிக்கொள்வதாலோ, தூங்கும் ஊரைத் தாக்கிப் பேசுவதாலோ என்ன வந்துவிடப்போகிறது?

  • அலமரல் = மனச்சுழற்சி, மனக்கலக்கம். 'அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி' - தொல்காப்பியம் உரியியல்.
  • உயவுநோய் = தனக்குள் கேள்வி கேட்டு விடை பெறமுடியாமல் கலங்கும் மனநோய். (உயா < உசா = வினா, உசாவு. ஒப்புநோக்குக. உசாத்துணை)


 2. பாடல்: 29 

குறிஞ்சித்திணை

தலைவன் கூற்று
 
நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.”
 
உரை :
(இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் இரவில் சென்றான். அவள் மறுத்தாள். மறுத்துவிட்டாளே என்று அவளை ஒதுக்கித் தள்ளிவிடாமல் அவள் நினைவாகவே இருக்கும் தன் நெஞ்சோடு தலைவன் பேசுகிறான். )
“நெஞ்சே! அவளிடம் நல்லுரையை எதிர்பார்த்துச் சென்றாய். அவள் வாய் நல்லுரையைத் தள்ளிவிட்டுப் புல்லுரையை எறிந்தது. அது உன்னிடம் தாவி விழுந்தது.
சுடப்படாத பச்சைமண்ணால் செய்து வைத்திருக்கும் மண்கலம் நிறைய நிறைய மழை பெய்தால் மண்கலம் என்ன ஆகும்? அதுபோல நெஞ்சே! நீ ஆகியிருக்கிறாய்.
காரணம் பெறமுடியாத ஒன்றின்மேல் நீ ஆசை வைக்கிறாய். பெரிதும் என்னிடம் சண்டை('பூசல்') செய்கிறாய். என்ன பயன்?
உச்சாங்கிளையில் இருக்கும் மந்தி தன் மகவைத் தன் வயிற்றில் தழுவிக்கொள்வது போல் உன் சொற்களைக் கேட்போர் (தலைவி) இல்லையே!”
  • உள்ளுறை உவமம் - மந்தி - தலைவி. குரங்குக் குட்டி - தலைவன்.
 

 3. பாடல்: 99

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.
 
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினாவிய தோழிக்கு, “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)
 
விளக்கவுரை:
             என் உள்ளத்தில் உன்னை எண்ணியிருக்கவில்லையா? எண்ணியெண்ணி,
            உன்னை நினைத்திருக்க இல்லையா? பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
            ஆனால், பொருள் ஈட்ட வேண்டும் என்ற உலக இயல்பிற்காகவே பிரிந்தேன்; அதேநேரம் உன்னையும் நினைத்து,  மயங்கினேனே!
            உயர்ந்த கடம்ப மரத்தினது கிளையைத் தொடுமாறு பெருகிச் சென்ற, மிகுந்த வெள்ளம்,
            பிறகு கையால் இறைத்துண்ணும் அளவு சிறுகிச் சென்று, இறுதியில் இல்லாமல்  ஆனது போல,
            எனது மிகுந்த காம நோயானது,  வெள்ளமாய் பெருகி, இங்கே நும்மைக் கண்டதும் இல்லாமல் போனது.   
 
 

 பாடல்: 183

சென்ற நாட்ட கொன்றைஅம் பசுவீ
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
சிறுதலைப் பிணையிற் றீர்த்த நெறிகோட்
டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை        
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புலத் தானே
 
            (பிரிந்து சென்ற தலைவன், சொன்ன காலத்தில் வராததால், வருந்தும் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.)
 
விளக்கவுரை:
            புல்லிய நிலமான இந்தக்காட்டில் உள்ள கொன்றைப்பூக்கள் மழை பெய்வதற்கு முன் பொலிவிழந்து,
            நம்மைப்போலவே பசலை நிறத்தில் காணப்படும். மேலும் எங்களைப்போன்று
            சிறுதலையை உடைய பெண்மானைப் பிரிந்து, நெறிந்த கொம்புடன் அலைந்து கொண்டிருக்கும் ஆண்மானையும் நம் தலைவர் அவர் சென்ற நாட்டினில் காண்பரோ; (கண்டால் என்னை நினைப்பரோ?)
            மேலும் நம் தலைவன் சென்ற நாட்டில், அந்தக்  காயா மரத்தின் பெரிய கிளையிலுள்ள பூக்களெல்லாம் மழை பெய்தபின் பூத்திருக்கும். அது,
            மெல்லிய மயிலினது, கழுத்தைப் போலப் பொலிவு பெற்றுத் தோன்றும். அதைக் கண்டாவது என்னை நினைப்பரோ?
            
  

 களவொழுக்கம் - சில புதிய சொற்கள்

1.   இயற்கைப் புணர்ச்சி : முதல் சந்திப்பும்அதன் நிகழ்வுகளும்.
2.  இடந்தலைப்பாடு: முதலில் சந்தித்த இடத்திலேயே அடுத்தடுத்து சந்தித்தல்
3. பகற்குறி : தோழியானவள், யாரும் வராத நல்ல இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல். அங்கு பகலில் காதலர்கள் சந்தித்தல்.
4.   பகற்குறியிடையீடு : அந்த் இடம் தடையாக இருந்தால் வேறோரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பாள்.
5. இரவுக்குறி : தோழியானவள், யாரும் வராத நல்ல இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல். அங்கு இரவில் காதலர்கள் சந்தித்தல்.
6.  இரவுக்குறியிடையீடு : அந்த் இடம் தடையாக இருந்தால் வேறோரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பாள்.
7. மடலேறுதல் : தம்மைத்தாமே அழகின்றி இழிவுப்படுத்திதலைவியின் மடம் ஏந்தி ஊர்வலமாக வருதல்.
    
 (இன்னும் இவற்றைத் தவிர...
அறத்தோடு நிற்றல்
உடன்போக்கு, 
பாங்கன் கூட்டம்
பாங்கியர் கூட்டம்
வெறியாட்டு
முருகாற்றுப்படுத்தல்
இற்செறிதல்
வரைவு கடாவுதல்)


இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...