நெடுநல்வாடை - கதைச்சுருக்கம்

          கூதிர்காலத்தில் நிகழ்வதாகத் தன் பாடலைத் தொடங்குகிறார் நக்கீரனார். அதாவது குளிர் காலத்தில், ஆநிரை மேய்ப்போர் நிரைகளுக்காய் வேறிடம் செல்ல, அங்கே குளிர் வாட்ட, அவர்கள் குளிரில் நடுங்கியபடி, நெருப்பு மூட்டி கைகளைக் காட்டி குளிர் காய.. விலங்குகள்மேய்தலை மறக்க, குரங்குகள் குளிரால் கூனி நிற்க, பறவைகள் மரத்திலிருந்து வீழ, கன்றுகளுக்குக் கூட பால் தர இயலாமல், அவற்றை தாய்ப்பசு உதைத்துத் தள்ள, குன்றுகளைக் குளிர்விக்கும் குளிராம் அது.

            குளி்ர் வந்தாலும், இன்னமும்  தூவானமாய் சிறுமழை இருந்து கொண்டே இருந்ததாம். அதனால் முல்லைக்காடுகளில் முசுண்டை, பீர்க்கம் பூக்கள் மலர்ந்திருந்தன. மீன் வரத்தும் இருந்து கொண்டிருந்ததை நீர்நிலைகளில் காத்திருக்கும் கொக்குகள் காட்டுகின்றன. நெற்கதிர்கள் முற்றி வளைந்தபடி உள்ளன. உயர்ந்த பாக்கு மரங்கள், தம் கிளைகளில் இருந்து, சொட்டு சொட்டாய் மழைநீரை வடிதுத்க் கொண்டிருந்தன.

           

            இனி காடுகளிலிருந்து ஊருக்குச் செல்வோம். காட்டின் அளவு இல்லையெனினும், ஊருக்குள்ளும் குளிர் இருக்கத்தான் செய்கிறது.

            மாடம் ஓங்கிய மல்லல் மூதூர். ஆறு கிடந்தன்ன அகன்ற தெருவில், திண்தோள் மக்கள், கண்ணி அணிந்து முறுக்குண்ட உடலுடன் குளிரையும் பொருட்படுத்தாது கள்ளுண்டு திரிந்தனர்.

    பெண்களோ, பணைத்தோளும் மெத்தென சாயலும், முத்து பொன்ற முறுவலும், குழையணிக்கேற்ற அசையும் கண்களும் கொண்டவராய், பூந்தட்டிலே வைக்கப்பட்ட பிச்சி விரிவதைக் கண்டு, மாலை நேரத்தை உணர்ந்து, நெய் விளக்கேற்றி,  நெல்லும் மலரும் கலந்து தூவி தெய்வம் தொழுதனராம்.

           மேலும் வீட்டின் வளர்க்கப்பட்ட புறாக்கள் வெளியே இரைதேட செல்லாது, இரவுபகல் தெரியாது மயங்கி இருந்தனவாம்.

       குற்றேவல் செய்வோரோ, குளிர்ச்சி தரும் சந்தனத்தை அரைக்காது, வெப்பந்தரும் கந்தூரியை அரைத்துக் கொண்டிருந்தனராம்.

            பெண்கள் நிறைய பூக்கள் சூடாது, சில பூக்களை மட்டும் சூடி, அகிலோடு அயிரையும் நெருப்பில் புகைத்தனராம்.

      குளிரினால் எப்போதும் சுஉழவும் ஆலவட்டம் என்னும் விசிறியும், சுருக்கப்பட்டது. வேலைப்பளு கொண்ட ஆழகிய சாளரங்கள் தாழிட்டுக் கிடந்தன.

     எவரும் குளிர்ந்த நீரைப் பருகாது மூட்டப்பட்ட நெருப்பின் வெம்மையை பெரிதும் விரும்பினர்.

      குளிர்ந்த யாழின் நரம்பினை, வெம்மையான தம் முலைகளில் தடவி முறை யாக ஒவிக்கச்செய்தனர்.

         தலைவனைப் பிரிந்த தலைவியும், தலைவியைப் பிரிந்த தலைவனும் மேலும் துன்புற்றனர்.

  ஊரைப் பார்த்து விட்டோம் அல்லவா? இனி அரண்மனைக்குள் செல்வோம். அரண்மனையானது, சிறந்த கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டு நிலத்தின் அமைப்பை ஆராய்ந்து, அகன்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

            நண்பகல் பொழுதினைக் கண்டறிய... இரு கோலினை நட்டு, மேற்கு நோக்கிச் செல்லும் கதிரவனின் கதிரானது, இக்கோல்களின் மேல் விழும் போது நிழல் ஒரு பக்கம் சாயாது நேராக விழுந்தால் அது நண்பகல் எனக் கணக்கிட்டுள்ளனர்.

  அரண்மனையின் வாயிலும், முற்றமும் மிக நேர்த்தியான கதவுகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே எகினமும், அன்னமும் ஏறும் தாவித் திரிந்து மேலும் அழகைக் கூட்டுகின்றன.

            அரண்மனையில் குதிரைகள் சத்தமெழுப்ப, எங்கோ குழாயலிருந்து விழும் நீரின் ஓசை, அருவியின் ஓசை போலக் கேட்டது. மயில்களின் அகவல் ஒலி இனிமையானதாக இருந்ததாம்.

         இத்தனை அழகான அரண்மனையின் அந்தப்புரம் எவ்வளவு ஆழகாக இருக்கும்? மன்ன‍ன் அல்லாது, வேறு ஆண்மகன் புக இயலா காவலை உடைய அந்தப்புரத்திற்குள் நாம் நுழைவோம்.

   யவனர்களால் உருவாக்கப் பெற்ற பாவை விளக்குகள் நெய்யூற்றப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன. பாறைப் பெண்டிர் முல்லைப்பாட்டில் செய்ததை, இங்கு அரண்மனைப் பெண்டிர் செய்து கொண்டிருந்தனர். அதாவது விளக்குகளுக்கு நெய் குறையும் போதெல்லாம் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

       இத்தகைய அந்தப்புரத்தில் கொடிகளும், பூக்களும் சுவை சுற்றியிருப்பதைப் போன்று காட்சிகள் வரையப்பட்டிருந்தன.  

    அடுத்து, அந்தப்புரத்தில் தலைவியின் அறைக்குள் செல்வோம். அங்கே தலைவியின் அறையில் ஓர் அழகான வட்டக்கட்டில்.

        முரசு போன்ற நான்கு கால்கள் கொண்ட கட்டிலிலே, இலை வடிவம் போல தந்தங்களால் பொறிக்கப்பட்டிருந்தது. இத்தகையவட்டக் கட்டில் பாண்டில்எனப்பட்டது.

      இத்தகைய கட்டிலினை மிக நேர்த்தியாய் அழகு செய்திருந்தனர். முத்து மாலைகளைக் கோர்த்து கட்டிலினைச் சுற்றித் தொங்க விடப்பட்டிருந்தது.

   பூக்களைப் பரப்பி, போர்வையும், அன்னச் சிறகுகள் இட்ட மெத்தையும் இட்டு தலையணைகளும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவ்றிற்கும் மேலாக கஞ்சியிடப்பட்ட ஓர் அழகிய துணியும் விரிக்கப்பட்டிருந்தது.

         கட்டிலின் மேலே, புனையா ஓவியம் கடுப்ப, புனைவுஇல் தலைவி கிடந்தாளாம். அதாவது ஒப்பனை இல்லா ஓவியம் போன்று ஒப்பனையின்றி தலைவி இருந்தாளாம். மேலும் அரசிக்கான அணிகலன்கள் ஏதுமின்றியும், எளிய ஆடை அணிகளுடன் இருந்தாளாம். பணிப்பெண்கள் அடிபிடிக்க, செவிலியர் இன்சொல் கூறித் தேற்ற, தேறாதவளாய் புலம்பிய வண்ணம் கிடக்கிறாள். செவிலித்தாயரும் தலைவன் வருகைக்காக கொற்றவையை வேண்டுகின்றனர்.

      கிட்டத்தட்ட நூலின் இறுதிவரை அகத்திணை சார்ந்தே பாடிவந்த புலவர், நூலின் இறுதி இருபது அடிகளில் அரசனின் நிலை விளக்கி, நூலையும் புறத்திணை நூலாக்கி விட்டார்.

                  “வினைநவில் யானை

                நீர்திரள் தடக்கை நிலமிசைப் புரள”

    வெட்டப்பட்ட யானைகளின் தும்பிக்கைகள் நிலத்தில் புரள, எதிரியானைகளை விழ்த்தினராம் வீரமறவர்கள். இப்படிப்பட்ட வீரர்கள் கூட விழுப்புண்கள் பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனராம்.

           தலைவியைக் காண்பதற்கு முன் தனக்காக போரிட்ட வீர‍ர்களைக் காணும் பொருட்டு, தலைவனும் தலையில் வேப்பந்தழை சூடி, வீரனொருவன் வழி காட்ட பின் தொடர்ந்தானாம்.

            வீர‍ர்களுடன், யானைகளையும், குதிரைகளையும் கண்ட பின்பு,  அவற்றின் புண்களைக் கண்டு இரக்கங் கொண்டவனாய் பாசறையில் வருந்தியபடி இருக்கிறான்.

            முத்துமாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை, மழையிலிருந்து மன்னனைக் காக்க, தலைவன் அந்நள்ளிரவு நேரத்திலும் தலைவியை எண்ணாது, தனது வீரர்களை எண்ணியபடி இவர்களுடன் வெற்றிப்பாசறையில் இருப்பதாக நெடுநல்வடையை நிறைவு செய்கிறார் நக்கீரனார்.


இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...