முல்லைப்பாட்டு -கதைச் சுருக்கம்

                பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வான் ஏர்பு

                கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

                பெரும்புயல் பொழிந்த சிறுபுன்மாலை

                ..............................................................

        ஒலிக்கும் பனிக்கடலை பருகி, வலப்புறம் எழுந்து, நேராக உயர்ந்து, விரைந்து செல்லும் மேகமானது, பெரும் மழை பொழிந்த கொடிய மாலை நேரத்தில்...

          மழை பொழியும் மாலைக்காலம் எங்ஙனம் கொடியதாக முடியும்? நமக்கெல்லாம் இனிமை தரும், ஆனால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு...

          விரிச்சி அதாவது நல்ல குறி கேட்க்க் காத்திருக்கும் பெருமுது பெண்டிர்க்கு. ஆய்ச்சியர் தம் கன்றுகளுக்கு கூறும் ஆறுதல் மொழியே நல்ல குறியானது.

          நாழி கொண்ட நெல்லோடு, நறு வீமுல்லை, அரும்பு அவிழும் அரளி கலந்து தூவி, ஊரின் புறத்தே நிற்கும் கொற்றவையிடம் வேண்டினராம்.

        முல்லைத் திணைக்கான உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள் அனைத்தையும் இந்த பத்தே அடிகளில் கூறி விட்டார் நப்பூதனார்.

     நல்ல செய்தி கிடைத்தவுடன், தலைவியிடம் சென்று, தலைவன் போரில் வென்று, தன் தேரில் திரும்பிக் கொண்டிருக்கிறானாம்.. நீ வருந்தாதே என்று தேற்றுகின்றனர்.

           

            இனி காட்சி மாறி, காட்டிலே தலைவனின் பாசறைக்குச் செல்கிறது,

            பாசறைகள் எவ்வளவு பாதுகாப்புடன் அமைக்கப்படுடள்ளது என்று விளக்கும் போது, காட்டாறு பாயும் முல்லை நிலத்தில், மணக்கும் முல்லை பசும்புற்கள் என அனைத்தையும் அழித்து, அங்கே வேட்டுவர்கள் ஏற்கனவே அமைத்திருக்கும் அவர்கள் இருப்பிடத்தையும் கைப்பற்றி, அவர்களைக் கொண்டே தம் படைகளுக்கு வேண்டிய பாசறைகளையும் அமைத்துக் கொண்டனராம்.

   படை என்றால் வீரர்கள் மட்டுமா? குதிரை யானை என்னும் விலங்குகளும்தான். யானைகளைக் கவனிப்போருக்கு யானையுடன் பேசும் வடமொழி தவிர வேறுமொழி தெரியாது என்ற குறிப்பும் உள்ளது.

     யானைப்படை, குதிரைப்படை வீரர்களிடம் வில், வாள், வேல் என படைக்கருவிகள் இருக்கம் அல்லவா? அவைகளும் ஆங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

         பாசறைகளுக்கு நடுவில், எல்லா அறைகளுக்கும் நடுவில், இன்னும் பாதுகாப்புடன் நீண்ட தூண்களும், திரைகளும் கூடிய பாசறை அரசனுக்குக் கட்டப்பட்டிருந்தது.

          பாசறைப் பெண்டிர் என்ற சொல்லாடல் கேள்விப்பட்டதுண்டா? பொருக்குப் பெண்களை அழைத்துச் செல்லும் வழக்கமு இல்லையே? பின்னர் ஏன் பெண்டிர் என சிந்தித்தால்

                        “நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ

                       கைஅமை விளக்கம் நுத்தோறும் மாட்ட”

            அதாவது அத்தனை பாசறைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் நீண்ட திரி கொண்ட

        பாவை விளக்குகள் அணைய முற்படும் போதெல்லாம், தம் கையில் வைத்திருக்கும் நெய் வைத்திருக்கும் சுரைக்காய் குடுவையைக் கொண்டு எரியச் செய்வது இவர்கள்தான் இப்பெண்டிர்தான்.

            ஆனாலும் பளிச்சிடும் ஒளிவிடும் வாளினையும், தம் கச்சையில் கொண்டிருப்பார்களாம். எவரேனும் தாக்க வந்தால், எதிர்த்தாக்குதல் நடத்தும் அளவு வாள்வீச்சில் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

            இவர்களைத் தவிர மெய்க்காப்பாளார்கள், குறுநீர்க்கன்னல் என்னும் நாழிகை காட்டும் கருவி கொண்டு, நாழிகையை கணக்கிட்டு, அறிவிக்கும் கணியர்கள் என இவர்களும் பாசறையில் இருப்பார்களாம். அது மட்டுமா? இரும்பில் வார் ஒன்றி கச்சையில் கட்டிய யவனர்கள் அதாவது கிரேக்கர்கள்; பாம்பு  போல சட்டை அணிந்த மிலேச்சர்கள் என அரசனுக்கு குற்றேவல் பணி செய்பவர்களும் பாசறையிலே யே இருந்திருக்கிறார்கள்.

            இத்தகைய பாசறையில், வெற்றி முழக்கம் முழங்கும் பாசறையில் ஒரு உருவம் மட்டும் அமைதியாய் எதையி சிந்தித்தபடி படுத்திருந்தது.

            வேலினால் விழுப்புண் பெற்று, அடிபட்டு தன் பெண்யானையின் நினைவே இல்லாமல் ஆண்யான்கள் துடிப்பதை எண்ணியும், அதுவும் எப்படி துடித்தது தெரியுமா? எதிரியின் யானைப்படை வேழங்களின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுண்டு, தரையிலே பாம்பு பதைப்பது போல துடிக்கும் அல்லவா? அதுபோல வலியினால் ஆண்யானைகள் துடிப்பதை எண்ணியும்,

            சேணத்தில் அம்பு பாய்ந்ததால் புண் கொண்டு, உணவு கொள்ளாது கிடக்கும் குதிரைகளைப் பற்றி எண்ணியும், போரிலே உயிர்நீத்த செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தனது வீர‍ர்களைப் பற்றிய எண்ணத்துடனும்,

            தனக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றிய நினைவின்றி , தன் கண்ணிமாலையைத் திருகிய வண்ணம் படுத்திருந்த அந்த மன்னன் வேறுயாருமல்ல; போரிலே வென்ற இப்படையின் மன்ன‍ன்தான்.

            இங்கே இவன் தனக்காக துன்புறும் படைகளை எண்ணி வருந்த, ஆங்கே இவனுக்காக இவன் வருகைக்காக, தலைவி பசலை கொண்டு, இடையில் மேகலை நில்லாமல், கைகளில் வளையணி கழன்று விழ அருகிலிருக்கும் பகுதியில் அருவி விழும் ஓசையைக் கேட்டபடி இருந்தாளாம்.

            சில நாட்கள் கழிந்து, அந்த அருவி விழும் ஓசையையும் மீறி, வேதேதோ ஒசை அவள் செவியை எட்டுகிறது.

                       “வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந்தானையோடு

                      விசயம், வெல்கொடி உயர வலன்ஏர்பு

                      வயிரும், வளியும் ஆர்ப்ப....”

            அதாவது போரில் வென்ற தனது பெரும் படையுடன், வெற்றிக்கொடி உயர்த்தி, உயர்ந்த வயிரும், வளைந்த கொம்பும் ஒருங்கே முழங்கும் ஓசைதான் அது;

            இப்படை இன்னும் காடுகளில்தான் வந்து கொண்டிருக்கிறது.

                            “செறி இலைக்காயா அஞ்சனம் மலர,

                        முறி இணர்க் கொன்றை நன்பொன்கால்

                        கோடல் குவி அங்கை அவிழ

                        தோடுஆர் தோன்றி குருதி பூப்ப...”

 

          அதாவது

            செறிந்த இலை கொண்ட  காய்ந்த அவிரிப்பூ மலர,

            கொத்தான கொன்றைப்பூ பொன்போல பூக்க,

            வெண்காந்தள் பூ அரும்பு விரல் போல விரிய,

            செங்காந்தள் மலரோ குருதியாய் பூக்க...

           

            செம்மாயான முல்லைக்காடுகளில் வரகுக் கொல்லையில் நீண்டு திரிந்த கொம்புகள் கொண்ட ஆண்மான்களும், பெண்மான்களும் இணைந்து தாவ... எதிர்த்து செல்லும் வெண்மேகங்களிலிருந்து மழை பொழிய...

            நாம் விரைந்து செல்லும் போது எதிர்தோன்றும் காட்சிகள் பின் செல்வது போல, இங்கே வள்ளிக்கிழங்குகள் முதிர்ந்த காடுகள் பின் செல்ல...

            அழகிய நெடிய தேரை, தேரோட்டி ஓட்ட, தலைவன் திரும்பிக் கொண்டிருந்தானாம். என்று முல்லைப்பாட்டை இனிதாக முடிக்கிறார் நப்பூதனார்.

 

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...